செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து ரூ.7 ஆயிரம் மற்றும் ரூ.22 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில் அடுத்த செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (48). இவர் சிங்கபெருமாள்கோவில் பேருந்து நிலையம் அருகே மளிகை கடை நடத்தி வருகின்றார். இதேபோல், சிங்கபெருமாள்கோவில் மேட்டு தெருவை சேர்ந்தவர் அஜ்மல் (34). இவர் சிங்கபெருமாள்கோவில் பேருந்து நிலையம் அருகே துணி மற்றும் செருப்பு கடை வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு வழக்கம் போல் கடைகளை மூடிவிட்டு வீட்டிற்க்கு சென்றுள்ளனர். தொடர்ந்து, நேற்று காலை கடையை திறக்க வந்த ராமசாமி கதவில் இருந்த பூட்டு உடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதேபோல், அஜ்மலுக்கு சொந்தமான கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரியபடுத்தியதை தொடர்ந்து மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மளிகை கடை, துணி மற்றும் செருப்பு கடையில் ஆய்வு மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் மளிகை கடையில் இருந்து ரூ.7 ஆயிரம் ரொக்கம், செருப்பு மற்றும் துணிகடையில் இருந்த பேன்ட் சட்டை, செருப்பு என ரூ.22 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக ராமசாமி, அஜ்மல் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிங்கபெருமாள்கோவில் பேருந்து நிலையம் அருகே நள்ளிரவில் அடுத்தடுத்த இரண்டு கடையின் பூட்டை உடைத்து பணம் துணிகள் செருப்புகள் திருடுபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post 2 கடைகளை உடைத்து பணம், பொருட்கள் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை appeared first on Dinakaran.